வாலை பூஜையின் ரகசியம்
#வாலை பூசையின் ரகசியம்...
பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும் ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம் என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று சித்தியடைவதுதான் வாலைபூசையின் நோக்கம்.
இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.
"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "
- கொங்கணவர் -
"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"
- கொங்கணவர் -
"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -
கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி சொல்கிறார்..
"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"
வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும் ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும் ஆகும்.
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை புற நிலையில் அல்லாமல் அக நிலையில் தெரிந்து கொண்டு , உணர்வைவும், நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில் பரம்பொருளுடன் சேர இவ் வாலைப் பூசையை கைக்கொண்டு சித்திபெற வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.
ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள் வழி சென்று சித்தி பெறலாம். ராம்சரவணன்
Comments
Post a Comment